அம்மனுக்கு உகந்த ஆடி வெள்ளி!

எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. ஆலயங்களில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இறைவியின் திருமேனியைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை.

எனவே தான் ‘கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி என்று சொல்வார்கள். அன்று தேடிச்சென்று வழிபட வேண்டிய ஆலயம் அம்பிகைக்குரிய ஆலயமாகும். அதுமட்டுமல்ல திருமகளை வழிபடுவதன் மூலமும் செல்வநிலை உயரும். எட்டுவகை லட்சுமிக்கும் இனிய விழா எடுப்பது ஆடி மாதமாகும். கிழமைகளில் சுக்ர வாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும். துள்ளித் திரியும் சிங்கத்தில் ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும்.

இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன. எனவே ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும். ஆடி மாதச் செவ்வாயன்று செட்டிநாட்டுப் பகுதிகளில் பெண்கள் மட்டும் ஒரு சந்திக் கொழுக்கட்டைப் பிடித்து வழிபாடு செய்வர்.

இதன் மூலம் குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்குத் தொழில் மேன்மையும் ஏற்படும். ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும். இல்லத்தில் மங்கலம் உண்டாகும்.

சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து இறைவனை வழிபாடுவார்கள். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும்.

திருச்சிற்றம்பலம் என்றால் என்ன?

#சிறு+அம்பலம்= சிற்றம்பலம். சிறிய வெளி என்று பொருள். அம்பலம்- வெளி, ஆகாயம்.

#நமது இதயத்தில் ஒரு சிறு வெளி இருப்பதாகவும் அதில் கட்டைவிரல் அளவே நம் ஆன்மா இருப்பதாகவும் கடோபநிஷத் கூறுகிறது.

அவ்வான்மாவுக்குள் ஆன்மாவாய் இறைவன் #ஆனந்த நடனம் ஆடிக்கொண்டிருப்பதாய் சிவாகமங்கள் கூறுகின்றன.

இதனை நம் போன்றோர் உணர்ந்து வழிபட்டு உய்வதற்காக தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் இறைவன் திருக்காட்சியளித்ததாக கோயில்புராணம் எடுத்துரைக்கின்றது.

அதாவது நாம் தான் அது,
அதுவே நாம் என்பதை உணர்த்துவதற்க்கே இந்த ஆனந்ததிருநடனம்.
அதாவது மனிதனின்
அகம் ஒரு கோயில்
உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,

திருச்சிற்றம்பலம் என்றால் நம்முள் இருக்கும் ஆன்மாதான்.

பொதுவே தில்லையை சுற்றி வசிக்கும் மக்களும்,
#சீவனே #சிவம் என்று உணர்ந்த ஆன்மீக பெருமக்களும் ஒருவருக்கொருவர் பார்க்கும் போதும், பேசும் போதும், தொடக்கத்திலும் , முடிவிலும் இரு கைகூப்பி #திருச்சிற்றம்பலம் என்று கூறுவர்.

அதற்க்கு எதிர்புரம் உள்ளவர் தில்லையம்பலம் என்று பதில் வணக்கம் கூறுவர்.

#இதற்க்கு என்ன பொருள் என்றால் உண்ணுள் இருக்கும் (பின்டத்தில் இருக்கும் உன் ஆன்மா அண்டத்தில் கரையட்டும்)உன் ஆன்மா சிற்றம்பலத்தில் இருக்கும் உன் ஆன்மா நிறைவு பெறுவதாக பரிபூரணமாவதாக என்று பொருள்

அதற்க்கு எதிரில் உள்ளவர் தில்லையம்பலம் என்று பதில் வணக்கம் சொல்லுவர்.

#உங்களை பார்த்து இனிமேல் யாராவது திருச்சிற்றம்பலம் என்று சொன்னால் உங்கள் #ஆத்மா நிறைவுபெறட்டும் என்று அவர்கள் வாழ்த்துகிறாற்கள் என்று அர்த்தம் பதிலுக்கு தாங்களும் தில்லையம்பலம் என்று கூறவேண்டும்.

கூறுவதோடு நில்லாமல்

#தில்லையம்பலத்தில் உள்ள ஆனந்த கூத்தனை மனதால் தரிசிக்க வேண்டும்.
உருவத்தில் இருந்து அருவமாக உன் ஆன்ம கரைய வேண்டும் என்றால் தில்லைக்கு போக முக்தி.

இதனை உணர்த்தவே #திருசிற்றம்பலத்தில் #நடராஜ பெருமான் மனித ரூபத்தில் #ஆனந்தகூத்தாடுகிறான்.

#நடராசப் பெருமானின் விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை 72,000 ஆணிகளால் அடித்துப் பொருத்தியிருக்கிறார்கள் .

மனிதன் நாள்தோறும் 21, 000 தடவை மூச்சுவிடுவதையும் , அவன் உடலில் 72,000 நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள் .

மனித உடலும் கோயில்தான் என்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியம் .!

#சிதம்பரகசியம் என்றால் வேறு ஒன்றுமில்லை ; எல்லாம் மனக் கண்ணால் பார்க்கவேண்டியது . திரை ரகசியம் . திரை விலகினால் ஒளி தெரியும் . மாயை விலகினால் ஞானம் பிறக்கும்

#இப்பதிவை படிக்கும் அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் #திருச்சிற்றம்பல வணக்கம்

#திருச்சிற்றம்பலம் என்று சொல்ல சொல்ல நாம் அறியாமல் பார்க்கும் பேசும் செய்யும் அனைத்து பாவச்செயல்களும் நீங்கி நம் ஆன்மாவிற்கு புன்னியம் சேற்க்கிறோம்….. அப்போது அரியாமையால் ஏற்படும் தவறு எவ்வளவு என்பது நமக்கு தெரியாது

அதனால் நாம் #திருச்சிற்றம்பலம் என்று நித்தமும் எவ்வளவு முறை சொன்னாலும் போதாதல்லவா?

மேலும் திருச்சிற்றம்பலத்தை தரிசிக்க வாய்ப்பு கிடைக்காமலும் உணராமலும் பலர் வாழ்வு முடிந்து விடுகிறது ஆனால் திருச்சிற்றம்பலம் என்று சொல்லி சொல்லியாவது அடுத்த பிறவியிலாவது சிவகதி அடைய வேண்டும் என்பதற்காக ஒரு ரஹசிய கோட் வேர்டாக இதை இறைவனே திருச்சிற்றம்பலமுடையான் என்று தன்பெயரை குறிப்பிட்டான்.

நந்தி என்பவர் யார் ?

நந்தி என்பது சிவபெருமானின் பெயரே. இதை திருமுறைகளில் நாம் உணரலாம். அந்த சிவபெருமானின் பெயரையே தன் பெயராகப் பெற்றவர் நந்தி தேவர். சிவ கணங்கள் அனைவருக்கும் தலைவர் நந்தி தேவரே. சிவாகமங்கள் அனைத்தையும் அறிந்தவரும் நந்தி ஒருவரே. சிவபெருமானே நேரடியாக சிவாகமங்களை நந்தி தேவருக்கு போதித்து அருள் செய்தார்.
சிலாதர் கண்டெடுத்த சிவக்குழந்தை
சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுவார். அழிவே இல்லாதது தருமம். அது விடை (ரிஷபம்) வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார். தருமம் இறைவனைத் தாங்குகிறது. அதுவிடும் மூச்சுக்காற்றுதான் இவருக்கு உயிர்நிலை தருகிறது. இதனால்தான் மூலவரின் தொப்புள் பகுதியை உயிர் நிலையாகக் கொண்டு, அதன் நேர்க்கோட்டில் நந்தியின் நாசி அமையுமாறு அமைக்கப்படுகிறது. இம்மூச்சு தடையேதுமின்றி மூலவரைச் சென்றடையத்தான்
நந்தியின் குறுக்கே போவதும் விழுந்து வணங்குவதும் கூடாது என்பது வழக்கத்தில் இருக்கிறது.
ருத்ரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப்ரியன், சிவவாஹனன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன்- இப்படி பல்வேறு சிறப்புப் பெயர்களோடு புராணங்களும் ஆகமங்களும் போற்றும் மூர்த்தி நந்தியெம் பெருமானே.
திவ்ய வடிவமும், நெற்றிக் கண்ணும், நான்கு புயங்களும், கையில் பிரம்பு உடைவாளும், சடைமுடியும், சந்திரகலையும், நீலகண்டமும், யானை புரியும், இருபுயங்களில் மானும் மழுவும் கொண்டு இன்னுமொரு சிவரூபனாகவே திகழும் நந்தியின் கதைதான் என்ன?
வீதஹவ்யர் என்ற பெயர் கொண்ட முனிவர், தம் சிறு வயதில் சிவனடியார் ஒருவரின் அன்னப் பாத்திரத்தில் விளையாட்டாக கல்லைப் போட்ட தீவினையால், இறந்த பிறகு பெரும் பாறை ஒன்றைத் தின்று தீர்க்க வேண்டும் என்ற தண்டனை இருப்பதை யமதூதர்கள் மூலம் முன்னரே அறிந்து, இறப்பதற்கு முன்னரே பாறையைத் தின்று தன் பாவம் போக்கிக்கொண்டவர். ஆதலால்தான் இவருக்கு “சிலாத முனிவர்’ என்ற பெயர் வந்தது.
திருமணம் முடிந்து பிள்ளை பெற்று பிதுர்க்கடனை நிறைவேற்ற சிலாத முனிவர் தவறியதால், அவரின் முன்னோர் நரகத்தில் உழன்று கொண்டிருந்தனர். இதனால் வருந்திய சிலாத முனிவர்
சித்திரவதி என்ற பெண்ணை மணம் செய்து கொண்டும் பிள்ளைப் பேறு கிடைக்கவில்லை.
சிலாத முனிவர் திருவையாறு தலத்தில் உறையும் ஐயாறப்பர் பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். ஆண்டுகள் பலவாகியும் மகப்பேறின்மையினால் மிகுந்த வருத்தமுற்ற சிலாதமுனிவர்,
தம் உயிரான ஐயாறப்பரைப் பூசித்து கடும் தவம் செய்தார். தனக்கு அறிவார்ந்த மகன் வேண்டுமென்று பிரார்த்தித்தார்.
இறைவன் அசரீரியாக “சிலாத முனிவரே! என்னைப் போன்றே உனக்கொரு மகன் வேண்டும் என்றால் நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய வேண்டும். யாகம் செய்ய யாக பூமியை உழும்போது பெட்டகம் ஒன்று தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனுக்கு ஆயுள் பதினாறு மட்டுமே. அவனை எடுத்துக்கொள்!” என்று அசரீரியாகத் திருவாய் மலர்ந்தருளினார்.
சிவனருளை எண்ணி சிலாத முனிவர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார். கலக்கமுற்ற சிலாத முனிவர் இந்திரனின் ஆலோசனைப்படி ஸ்ரீ சைலமலை சென்று புத்திர காமேஷ்டி யாகம் செய்ய முற்பட்டபோது, தங்கப் பெட்டியில் சிவரூப சுந்தரனாக குழந்தையொன்றைக் கண்டெடுத்தார். அக்குழந்தைக்கு நான்கு தோள்களும் மூன்று கண்களும் பிறையணிந்த முடியும் கொண்டு விளங்கும் ஒரு மூர்த்தியைக் கண்டு வணங்கினார்.
ஐயாறப்பர் மீண்டும் அசரீரியாய், “முனிவரே! பெட்டியை மூடித்திற” என்று கட்டளையிட்டருளினார். பெட்டகத்திலிருந்த அம்மூர்த்தி முன்னைய வடிவம் நீங்கி பிரகாசத்தோடு அழகிய குழந்தை வடிவுடன் திகழ்ந்தது. அக்குழந்தையைக் கண்டு சிலாத முனிவரும் அவரது மனைவி சித்ராவதியாரும் பெருமகிழ்ச்சியும் பேரானந்தமும் அடைந்தனர். அந்தக் குழந்தையே நந்தியெம் பெருமானாவார். நந்தி என்றால் மகிழ்ச்சி என்று பொருள். சிலாதரின் கவலையைப் போக்கி மகிழ்ச்சி உண்டாக்கும் விதம் கிடைத்தவர் ஆதலால் நந்தி என்று அவருக்குப் பெயரிட்டார் சிலாதர்.
பெற்றோர் அக்குழந்தைக்கு செபேசுவரர் என்று நாமகரணம் செய்து வளர்த்து வந்தார்கள். செபேசுவரர் பதினான்கு வயதிற்குள் வேதாகம சாஸ்திரங்கள் உட்பட சகல கலைகளிலும் வல்லவரானார். சிறு வயதிலேயே அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார் நந்தி. இந்நிலையில் சிலாதரின் இல்லத்துக்கு வருகை தந்த மித்ரன்,  வருணன் போன்றோர் நந்தியின் ஆயுள் இன்னும் ஒரு வருடமே என்று சிலாதரிடம் எடுத்துச் சொல்ல, மிக வருத்தம் கொண்டார் சிலாத முனிவர். அழகிலும் அறிவிலும் சிறந்த இம்மைந்தனை இன்னும் இரண்டு வருடத்தில் இழக்க நேருமே என்று ஏங்கி வருந்திய பெற்றோருக்கு ஆறுதல் கூறிவிட்டு ஐயாறப்பர் ஆலயத்தை அடைந்தார் செபேசுவரர். இறைவனைத் தொழுது வழிபட்டார். தனக்கு நீண்ட ஆயுளைத் தந்து பெற்றோரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தருளும்படி வேண்டினார். பின்னர் அங்கிருந்த அயனரி தீர்த்தத்திலே நீராடிய பிறகு, இடுப்பளவு நீரில் காலின் மேல் காலையூன்றி ஒற்றைக் காலில் நின்று, பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்தபடியே நீண்ட காலம் தவம் செய்தார். செபேசுவரரின் அருமைத்  திருமேனியை நீரில் வாழும் ஜந்துகள் அரித்துத் தின்றன. செபேசுவரரின் உறுதியான தவத்தையும், வைராக்கியத்தையும், அன்பையும் கண்டு மகிழ்ந்த இறைவன் ஐயாறப்பர் அவருக்குக் காட்சியளித்தார். செபேசுவரர் வேண்டிய படியே நிலையான நீண்ட ஆயுளைத் தந்தருளினார். அதோடு, செபேசுவரர் கேட்டுக்கொண்டதற்கிணங்க நிலைத்த பதினாறு பேறுகளையும் வரமாக அருளினார்.
நந்தியின் தவமும் ஈசன் தந்த பட்டமும்
மேலும், செபேசுவரரது புண்பட்ட உடலை நலமுறச் செய்தல் வேண்டுமெனத் திருவுளங் கொண்டு கங்கை நீர், மேகநீர், பிரமன் கமண்டலநீர், அம்மையின் முலைப்பால், இடப நந்தியின் வாய்நுரைநீர் எனும் ஐந்து நீரினாலும் தாமே அபிஷேகம் செய்தார், இறைவன். அதனால் செபேசுவரர் உடல் ஊறு நீங்கிச் சூரியன் போல் பிரகாசித்தார். சிலாத முனிவர் தம் மகனுக்குத் திருமணம் செய்விக்க எண்ணினார். அதற்கான நடவடிக்கை மேற்கொண்டார். வசிஷ்ட முனிவரின் பவுத்திரியும், வியாக்ரபாத முனிவருடைய புத்திரியும், உபமன்யு முனிவரின் தங்கையுமாகிய சுயம்பிரகாச அம்மையாரை தமது புதல்வன் செபேசுவரருக்குத் திருமணம் செய்விக்க  விரும்பினார்.
இறைவன் ஐயாறப்பர்; இறைவி அறம் வளர்த்த நாயகி ஆகியோரின் முன்னிலையில், திருமழபாடி வஜ்ர தம்பேசுவரர் கோயிலில் பவித்திரமான பங்குனித் திங்களில் புனர்வசு நட்சத்திர தினத்தில்
செபேசுவரர்க்கும் சுயம்பிரகாச அம்மையாருக்கும் இனிதே திருமண விழா நடந்தேறியது.
இறுதியாக நந்தியைத் தன் அம்சமாகவே மாற்றி, தன் சிரசிலிருந்து மாலை எடுத்து நந்திக்கு அணிவித்து, அதிகார நந்தி என்ற பட்டத்தையும் அளித்து கயிலாயத்தில் அமர்த்தினார் இறைவன்
ஐயாறப்பர். பின் செபேசுவரர் ஐயாறப்பரால் உபதேசம் பெற்று கைலாயத்தில் சிவகணங்களுக்குத் தலைவராகும் பதவியும்; முதன்மைத் திருவாயிலில் இருந்து காக்கும் உரிமையும், சைவ ஆச்சார்யருள் முதல் குருவாகும் தன்மையும் பெற்றார். இறைவன் அருளால் இத்தகைய பேறு பெற்ற செபேசுவரர் திருநந்தியெம்பெருமான் என்று அழைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ஐயன் ஐயாறப்பரும்; அம்மை அறம் வளர்த்த நாயகியும், புதுமணத்தம்பதியரான நந்தியெம்பெருமானையும் சுயம்பிரகாச அம்மையாரையும் அழைத்துக் கொண்டு சப்த ஸ்தானத் தலங்களான திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஊர்களுக்குத் திருவுலா சென்று வருகிறார்கள்.
இறைவனும் இறைவியும் கண்ணாடிப் பல்லக்கிலும்  நந்தியெம்பெருமானும் சுயம்பிரகாச அம்மையும்
வெட்டிவேர் பல்லக்கிலும் உலா வருகிறார்கள். இந்நிகழ்ச்சி ஏழூர் திருவிழா என்று இன்றளவும் நடைபெற்று வருகிறது.
நந்திதேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புதக் காட்சி ஒன்று நாகை மாவட்டம், ஆத்தூர் மந்தாரவனேசுவரர் ஆலய கோஷ்டத்தில்- கருங்கல்லில் வடிக்கப்பட்ட சிற்ப வடிவில் உள்ளது.
தவம் செய்ததனால் நந்தியெம் பெருமான். சிவாலயங்கள் தோறும் வீற்றிருக்கும் பேறும், பிரதோஷ காலங்களில் வழிபடுவோருக்கு அருள் வரம் தரும் பேறும் கிடைக்கப் பெற்றார்.
சிவபெருமான் இருக்குமிடம் கயிலாயம். சிவபெருமானை நேரடியாகச் சென்று தரிசித்துவிட முடியாது. நந்தி உத்தரவு பெற்றுத்தான் கயிலைக்குள் நுழைய முடியும். எதையாவது செய்ய முடியாமல் யாராவது தடுத்தால், “இவன் என்ன நந்தி மாதிரி தடுக்கிறான்’ என்பார்கள். நந்தியின் வேலை தடுப்பதுதான்.
முப்புரம் எரிப்பதற்காக சிவன் புறப்பட்டார். அப்போது அச்சு முறிந்தது. விஷ்ணு நந்தியாகி, தேரினைத் தாங்கினார். தர்மதேவதை சிவனுக்கு நந்தியானார். அந்த நந்திதான் சிவாலயத்தின் கர்ப்பக் கிரகத்துக்கு மிக அருகில் இருக்கும் நந்தியாகும். அந்த நந்திக்கும் மூலவருக்கு இடையில் குறுக்கே போகக் கூடாது என்பார்கள். தர்ம நந்தியின் மூச்சுக்காற்று மூலவர்மீது பட்டுக்கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்.
திருச்சிற்றம்பலம்.

விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை.

1. மச்ச அவதாரம்

தாயின் வயிற்றிலிருநது ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன்.

2. கூர்ம அவதாரம்

மூன்றாம் மாதம் கவிழந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை.

3. வராக அவதாரம்

ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி.

4. நரசிம்ம அவதாரம்

எட்டாம் மாதம் உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மம் .

5. வாமண அவதாரம்

ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்.

6. பரசுராம அவதாரம்

வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.

7. ராம அவதாரம்

திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது.

8. பலராம அவதாரம்

இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர், உலகோர்க்கு கடமையாற்றுவது.

9. கிருஷ்ண அவதாரம்

முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து
அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது.

10. கல்கி அவதாரம்

இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும், தன்னுள் எல்லாவற்றையும் காணும் அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது.

ஆணவம்

மயிலுக்கு இருப்பதைப் போன்ற அழகு மிகுந்த தோகை, வேறு எந்த பறவைக்கும் கிடையாது. யானையின் தந்தங்களைப் போல, வேறு எந்த விலங்குக்கும் அழகு மிகுந்த தந்தங்கள் இல்லை. ஹார்ஸ் பவர் என்று சொல்லப்படும் குதிரையின் ஓட்டத்திற்கு இணை உண்டா? இருந்தும், அவை எல்லாம் கர்வப்படுவதில்லை. ஆனால், அவற்றை எல்லாம் தன் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளும் மனிதனுக்கோ ஆணவம் கண்ணை மறைக்கிறது. பைரவரைச் சுற்றி, நான்கு நாய்கள் இருப்பதை படத்தில் பார்த்திருப்போம்.

பைரவரின் திருமேனி, அபூர்வமான அமைப்பு கொண்டது. அவரின் திருவடி முதல் இடுப்பு வரை, பிரம்மதேவரின் வடிவம்; இடுப்பு முதல் கழுத்து வரை, மகாவிஷ்ணுவின் வடிவம்; கழுத்து முதல் திருமுடி வரை, ருத்ர வடிவம். இவ்வாறு, மும்மூர்த்திகளின் வடிவாகத் திகழ்பவர், பைரவர். ஒருநாள், சிவபெருமானை தரிசிக்க, கைலாயம் வந்தார் பைரவர். வெளியில், தன் வாகனமான சுவானத்தை (நாயை), நிறுத்தி விட்டு, கைலாயத்திற்குள் பிரவேசித்து, சிவபெருமானை தரிசித்து திரும்பும் போது, சுவானத்தை காணவில்லை. பல இடங்கள் தேடியும் தென்படவில்லை.

வருத்தத்தோடு மறுபடியும் கைலாயநாதரை தரிசித்து, முக்கண் முதல்வரே… தங்கள் ஆணைப்படி, உலகெங்கும் வலம் வந்தேன்; தீயவர்களை தண்டித்தேன். இன்று, தங்களை தரிசித்து திரும்பிய போது, அடியேனின் வாகனத்தை காணவில்லை; எங்கு தேடியும் பலன் இல்லை. ஏன் இப்படி என்பது புரியவில்லை… என முறையிட்டார்.
பைரவா… உன் வாகனமான சுவானம், சாதாரண சுவானங்களில் ஒன்றல்ல; வேதமே அவ்வடிவில் உனக்கு வாகனமானது. இது உனக்குத் தெரிந்திருந்தும், ஆணவத்தில், அதை சாதாரண சுவானமாக நினைத்து விட்டாய்… அகங்கார வசப்பட்டோருக்கு வேதத்தின் பொருள் விளங்காது. அதன் காரணமாகவே, உன் வாகனம் மறைந்தது… என்றார். அதைக் கேட்டதும், பைரவர் நடுங்கி, பரம் பொருளே… அடியேன் அகங்கார வசப்பட்டதற்கு சரியான தண்டனை கிடைத்து விட்டது; மன்னித்து, அருள் புரியுங்கள்… என வேண்டினார். பைரவா… மதுரைக்கு வடமேற்கில், வாதவூர் எனும் தலத்திற்கு செல். அங்கு உன் துயரம் தீரும்… என்று அருள் பாலித்தார் சிவபெருமான்.

வாதவூர் என அழைக்கப் பட்ட திருவாதவூருக்கு புறப்பட்டார் பைரவர். இவ்வூருக்கு வேதபுரி என்ற பெயரும் உண்டு. இங்கு, தன் பெயரால் குளம் உண்டாக்கி, நீராடியவர், திருநீறு அணிந்து, ருத்ராட்ச மாலை சூடி, ஆலயத்திற்குள் புகுந்து, சிவனை பூஜித்தார்.
பெருமானே… பொல்லாத ஆணவத்தால், நான் பட்ட துன்பம் போதும். வேத மயமான வாகனத்தை இழந்த அடியேனின் துயரத்தை தீருங்கள்… என மனமுருகி வேண்டினார். அப்போது, மூல லிங்கத்தில் இருந்து நான்கு சுவானங்களுடன் வெளிப்பட்ட சிவபெருமான், பைரவா… வேத மயமான இந்நான்கு சுவானங்களையும் பெற்றுக் கொள்; இவை அனைத்து விதமான பேறுகளையும் தரும். உன்னால் உருவாக்கப்பட்ட பைரவ தீர்த்தத்தில் நீராடியவர்கள், எல்லா மங்கலங்களையும் அடைவர்…
என்று அருளி, மறைந்தார். அகங்காரம் நீங்கி, சிவபெருமானால் அருளப்பட்ட நான்கு சுவானங்களுடன் அங்கிருந்து புறப்பட்டார் பைரவர். மனிதன், ஒவ்வொரு படியாக முன்னேற முன்னேற, அவனை அறியாமலே, ஆணவம் தலையெடுக்கும். சிறிதளவு ஏமாந்தால் கூடப் போதும். நம் முன்னேற்றத்திற்கு காரணமானவை, நம்மிடம் இருந்து மறைந்து விடும் என்பதை மறந்து விடாதீர்கள்!

மெளனவிரதம்

மெளனவிரதம் இருப்பது வாய் எனும் உறுப்பின் மற்றொரு விரதமாகும். மெளவிரதத்தால் நமது உடல் மற்றும் மனது தூய்மை ஆகிறது. மெளனவிரதம் அனைவரும் இருக்க தகுந்த ஒரு விரதம். இதில் யாருக்கும் தடையில்லை. உலகின் சிறந்த மொழி மெளனம். தக்‌ஷ்ணாமூர்த்தி உலகுக்கு அளித்த வேதம். மெளனமாக இருப்பதால் நம்மில் இருக்கும் சக்தியை மிகவும் துல்லியமாக அறியலாம். மெளனவிரதம் இருந்துவந்தால் உங்கள் உள்ளுணர்வு மிகவும் கூர்மையானதாக மாறி உங்களை விழிப்புணர்வாளர்களாக மாற்றும்.

* மெளனவிரதம் இருக்கும் பொழுது சிலர் காகிதத்தில் எழுதி காட்டுவார்கள். மனதை ஒருநிலைப்படுத்தும் நோக்கில் இருக்கும் விரதத்திற்கு இது எதிரான செயல். மெளனவிரதம் இருக்கும் காலத்தில் உங்களை ஒரு ஜடப்பொருளாக பாவித்துக்கொள்ளுங்கள். உங்கள் உடல் செயல்படலாம் ஆனால் சைகை மூலமோ, எழுத்து மூலமோ பேசாதீர்கள். அப்பொழுது தான் மெளனவிரதத்தின் பயனை முழுமையாக உணரமுடியும்.

* விரதங்களில் வாய்மூலம் அனுஷ்டிக்கும் விரதத்தை பற்றி பார்த்தோம். ப்ராணாயமத்தில் கும்பகம் எனும் செயல் தற்காலிகமான சுவாச விரதம் எனலாம். மேலும் பிரம்மச்சரிய விரதம் தொடு உணர்வுக்கு விரதமாகும்.

* ஒரு ஆன்மீகவாதிக்கு வைராக்கியம், அப்யாசம், பக்தி ஆகியவை மிகவும் முக்கியம். தனது எடுத்துக்கொண்ட செயலை எப்பாடுபட்டாவது முடிக்கும் செயல் வைராக்கியம். தனது ஆன்மீக செயல்களை தடையில்லாமல் தினமும் எந்த காரணம் கொண்டும் விடாமல் செய்வது அப்யாசம். ஈஸ்வரனிடத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் இருப்பது பக்தி. ஆன்மீகவாதியின் லட்சணங்களான இவை விரதம் இருக்கும் பொழுது நம்மில் செயல்படத் தொடங்கும். இறைவனை நினைத்து உண்ணாமல் இருக்கும் பொழுது நம்மில் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவதன் காரணமும் இதுதான்.

* நமது சாஸ்திரம் பஞ்ச அவயங்களுக்கும் தனித்தனியே விரதங்களை வழங்கி உள்ளது. நமது உணர்வு உறுப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தினால் அதன் சக்தியையும் படைப்பாற்றலையும் மேம்படுத்தமுடியும். இரைச்சலான ஒரு சந்தையில் ஒருவரை அழைத்தால் அவருக்கு நாம் அழைப்பது கேட்காது, அதே நேரம் அமைதியான ஒரு தோட்டத்தில் இருக்கும் ஒருவரை அழைத்தால் அவருக்கு நமது அழைப்புரியும். அது போல உங்கள் உணர்வு உறுப்புக்கள் சந்தைக்கடை போல பல செயல்களில் ஈடுபடும் பொழுது பரமாத்மாவை அழைத்தால் அவரிடம் நீங்கள் நெருங்க முடியாது. விரதம் மூலம் உங்கள் உடலை மேன்மையாக்குங்கள். உங்கள் உடல் எனும் நந்தவனத்தில் பரமாத்மா நிரந்தரமாக வசம் செய்வார்.

இறைவழிபாட்டால் ஏற்படும் இழப்புகள்!

ஆயிரம் கிரணங்கள் நீட்டி
அணைக்கின்ற ஆதவா போற்றி!
ஆனந்தம் அருளும் அற்புத சூரியனே போற்றி!

‘‘தினமும் இறைவனுக்கு பூஜை செய்கிறீர்களே, அதனால் என்னென்ன லாபங்களை நீங்கள் பெற்றீர்கள்?’’ ‘‘உண்மையில் சொல்லப்போனால் நான் நிறைய இழந்திருக்கிறேன்.’’ ‘‘இழப்புகள்தான் அதிகமா? அப்படியானால் ஏன் தொடர்ந்து இறைவழிபாடு செய்துகொண்டிருக்கிறீர்கள்? ஆனால், நீங்கள் இழந்ததாகச் சொல்லும்போது உங்கள் குரலிலும், முகத்திலும் வருத்தமே இல்லையே! அத்தனை ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையா?’’

‘‘உண்மைதான். நான் இழந்தவை என்னென்ன தெரியுமா? முதலில் என் கோபம். அடுத்ததாக என் பொறாமை, எனக்குள்ளிருந்த வன்மம், சுயநலம் எல்லாம்தான்…’’
‘‘வந்து… நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?’’‘‘ஆமாம், இறைவழிபாட்டின்போது யார்மீதும் கோபம் எழுவதில்லை;  பொறாமைப்படுவதில்லை; எந்தப் பகையும் எனக்குள் நிழலாடுவதில்லை; ‘நான், எனது’ என்ற என் சுயநல எண்ணங்கள் தலை தூக்குவதேயில்லை…’’

‘‘சரி, இறைவழிபாடு முடிந்த பிறகு?’’‘‘உண்மைதான். நான் யதார்த்தத்துக்கு வந்துவிடுகிறேன். எனக்குள் பூஜையின்போது தோன்றாத தீய எண்ணங்கள் தலைதூக்கத்தான் செய்கின்றன. ஆனால், அதற்காகவே ஒரு பயிற்சி முறையாக நான் அடுத்த நாள் இறைவழிபாட்டு நேரத்தை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருப்பேன்.’’‘‘அதாவது, இறைவழிபாட்டு நேரத்தில் மட்டும் உங்கள் தீய குணங்களை நீங்கள் மறந்துவிடுகிறீர்கள்?’’
‘‘அப்படித்தான். ஆனால், தினமும் பூஜையும் அந்த நேரத்தில் என்னை சுத்தப்படுத்திக்கொள்வதுமான பழக்கமும் அழுத்தமாக எனக்குள் விதைக்கப்பட்டுவிடுகின்றன. இதனாலேயே பிற நேரங்களிலும் அந்த தீய எண்ணங்கள் என்னுள் உருவாகும்போது என்னையே நான் வித்தியாசமாக நோக்குவேன்.

கோபத்தை இழந்த பிறகு, எனக்கு நண்பர்கள் நெருக்கமானார்கள்; பொறாமையை இழந்தபோது என்மீது அக்கறை கொள்பவர்கள் அதிகமானர்கள்; வன்மம், சுயநல உணர்வை இழந்த பிறகு எனக்கு சமூகத்தில் நன்மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதாவது, நான் இழந்தவை மூலமாக அந்தக் கடவுளே பல லாபங்களை எனக்கு ஆசீர்வதித்திருக்கிறார்…’’‘‘தினசரி இறைவழிபாட்டால் நன்மைகள்தான் அதிகம் போலிருக்கிறதே!’’

‘‘உண்மைதான். எது இல்லாவிட்டாலும் மனம் அமைதியாகும். அலைபாய்வதிலிருந்து விடுபடும். எல்லோரிடமும் அன்பு பாராட்ட முடியும்; எந்த விஷயத்தையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்; சரியான நடவடிக்கையை எடுக்க முடியும்-குறிப்பாக அடுத்தவரை பாதிக்காமல்!’’‘‘இனிமேல் நானும் இறைவழிபாட்டில் தினமும் சில நிமிடங்கள் செலவிடப்போகிறேன்; சந்தோஷத்தையும், மன நிம்மதியையும் வெகுமதியாகப் பெறப் போகிறேன்!’’

நோய்கள் விலகவும் – நோயற்ற வாழ்வு வாழவும் தன்வந்திரி மந்திரம்

தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறார். திருப்பாற்கடலைக் கடையும்பொழுது அமிர்த கலசத்துடன் வந்தவர். கீழ்க்குறிப்பிட்ட அவருடைய மந்திரத்தை தினமும் காலை, மாலை வேளைகளில் பக்தியுடன் கூறிவந்தால் கொடிய நோய்கள் விலகும். நோயற்ற வாழ்வு கிட்டும். மேலும் மருத்துவமனைகளில் தன்வந்திரி படத்தை வைத்து இந்த மந்திரத்தையும் அதன்கீழ் எழுதி வழிபட்டால் அந்த மருத்துவமனை பிரபல்யமடையவும். தன்வந்திரியின் அருள் கிட்டும்.

ஓம் நமோ பகவதே மஹா சுதர்சன வாசுதேவாய
தந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வபய விநாசாய சர்வரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே
ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்வரூப ஸ்ரீதந்வந்த்ரி ஸ்வரூப
ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஒளஷத சக்ர நாராயண ஸ்வாஹா

தன்வந்திரி ஸ்லோகம்

சதுர்புஜம் பீத வஸ்திரம்
ஸர்வாலங்கார சோபிதம்
த்யோயேத் தன்வந்த்ரிம்
தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.

மரண பயம் நீங்க ஸ்ரீ ருத்ரம்

நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய த்ரயம்பகாய – த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம:

தன்வந்திரி மந்திரம்

கார்த்திகை தீபத் திருநாள்

கார்த்திகை தீபப் பெருநாள் அன்றுதான் திருவண்ணாமலை திருத்தலத்தில் இறைவன் இறைவிக்கு இடப்பாகம் அளித்து அர்த்தநாரீஸ்வரர் ஆகக் காட்சி அளித்தான்.
அந்த நன்னாளில் மலைவலம் வருவது மகத்தான புண்ணியத்தைத் தரும்.
குறிப்பாக திருவண்ணாமலை கிரிவலம் அனைத்துப் பாவங்களையும் போக்கி மகத்தான புண்ணிய பலனைத் தரவல்லது.
கிரிவலம் பற்றிய தகவல்கள் சிலவற்றைப் பார்ப்போம் !

மலையின் பெருமை :-
இம்மலை பிறப்பு, இறப்பினை நீக்க கூடியது. ஆதலால் மலைமருந்து என்றும், சிகப்பு நிறம் உடையதால் அருணாகிரி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மலையே இலிங்க வடிவாக இருப்பதால் இம்மலையைச் சுற்றுவது இறைவனையே சுற்றி வருவதற்கு சமாகக் கருதப்படுகிறது.
சீல முனிவோர்கள் செறியு மலை..
சிந்திப்பார் முன் நின்று முக்தி வழங்கு மலை..
ஞான நெறி காட்டு மலை..
ஞான முனிவோர்கள் நித்தம் நாடு மலை..
– என்றெல்லாம் அண்ணாமலை வெண்பாவில் குரு நமசியாவர் இம்மலையைப் போற்றுகிறார்.
கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் திருவுருவம் கொண்டுள்ளது அண்ணாமலை. இத்தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கிரிவலம் :-

இம்மலையின் சுற்றளவு 14 கி.மீ. கிரிவலத்தை எங்காவது துவங்கி, எப்படியாவது முடித்தல் கூடாது. அதன் பெயர் கிரிவலமும் அல்ல. முதலில் ஆலயத்தின் புறத்தே இருக்கும் பூத நாராயணரிடம் மலையைச் சுற்றுவதற்கு அனுமதி வாங்கிக் கொள்ள வேண்டும்.
அவர் தான் இம்மலையைக் காவல் காக்கிறார்.
அதன் பின் விக்னங்கள் ஏதும் இல்லாமல் சிறப்பாய் மலை வலம் முடிய வேண்டும் என்று வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்கி வேண்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஆலயம் சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்தல் வேண்டும்.
அதன் பின் வெளியில் வந்து ராஜ கோபுரத்தை வணங்கி விட்டு மலை வலத்தை ஆரம்பிக்க வேண்டும்.
மலையின் எட்டு திசைகளிலும் தன் பாவங்களை போக்கிக் கொள்வதற்காக வழிபட்ட அஷ்டதிக்கு பாலகர்களில், கிழக்கிற்கு அதிபதியான இந்திரன் வழிபட்ட இந்திரலிங்கத்தை முதலில் வழிபடவேண்டும்.
மலை சுற்றும் சாலையில் உள்ள நந்திகேசுவரர் சன்னதியை வணங்கி வழிபட்டு பின்னர் தான் மலைவலம் வர வேண்டும்.
தென்கிழக்கு திசைக்கு அதிபதியான அக்னி பூஜை செய்த அக்னி லிங்கம் உள்ளது. இதன் அருகில் சிம்ம தீர்த்தம் உள்ளது.
வழியில் உள்ள சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம் மகத்தான மந்திர சக்தி வாய்ந்தது. கேட்ட வரத்தைத் தர வல்லது. இங்கு கிட்டத்தட்ட 22க்கு மேற்பட்ட மகான்கள் ஜீவ சமாதியில் உள்ளனர். வழிபடுதல் சிறப்பு. தொடர்ந்து ரமணாஸ்ரமம் ஆன்ம அமைதியைத் தர வல்லது. சற்றுத் தொலைவில் விசிறி சாமியார் ஆசிரமம் அமைந்துள்ளது. மன அமைதியைத் தர வல்லது.

தியானம்‬ செய்ய ஏற்ற இடம் அது.

அடுத்து வழியில் தெற்கு திசைக்கு அதிபதியான எமன் பூஜை செய்து வழிப்பட்ட எமலிங்கம் உள்ளது. எமன் கட்டளை நிறைவேற்றும் கின்னரர் முதலானோர் இங்கிருந்து தான் புறப்பட்டு செல்லுகின்றனர் என்பது நம்பிக்கை.
அடுத்து தென்மேற்கு திசைக்கு அதிபதியான நிருதி, சிவனை வழிப்பட்ட நிருதி லிங்கம் உள்ளது.
இங்கு வணங்கிய பின்பு தெற்கிலிருந்து மேற்கில் திரும்பும் வளைவில் நின்று மலையை தரிசிக்க வேண்டும். இந்த இடம் பார்வதி தேவிக்கு ரிஷப வாகனத்தில் சிவபெருமான காட்சி அளித்த இடம் ஆகும்.
ஆதலால் இங்கு மலையின் முகப்பில் தெரியும் நந்தியின் தலையை வணங்கிச் செல்ல வேண்டும். அடுத்து அருணாசலேஸ்வரின் கோயிலுக்கு நேர் எதிரில் திருநேர் அண்ணாமலை கோயில் உண்டு. இங்கு உண்ணாமுலை அம்மன் தீர்த்தம் அருகிலேயே உள்ளது. அதனை வழிபட வேண்டும். வழியில் அடிமுடி சித்தர் ஜீவ சமாதி இருக்கும். இங்கு தியானம் செய்தால் மகத்தான புண்ணிய பலன்கள் கிடைக்கும்.
அடுத்து சூரியன் வழிபட்ட லிங்கம். மேற்கு திசைக்கு அதிபரான வருணன் வழிபட்ட வருண லிங்கம் ஆகியவை உள்ளது. அதனை வழிபட்ட பிறகு பிரம்மன் வழிபாடு செய்து பாவங்களை போக்கி கொண்ட ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது.
இந்த கோயிலை அடி அண்ணாமலையார் என்று அழைப்பர். இங்கு அவசியம் தரிசனம் செய்தல் வேண்டும். இது மாணிக்கவாசகர் திருவெம்பாவை அருளிய இடம். இவ்வாலயம் செல்லும் வழியில் மாணிக்கவாசகரின் ஆலயம் உள்ளது.
அதற்கடுத்து வடமேற்கு திசைக்கு அதிபதியான வாயுலிங்கம் உள்ளது. சிறிது தூரம் சென்றால் வட திசைக்கு அதிபதியான குபேரன் வழிபட்ட குபேர லிங்கம் காணப்படும்.
அடுத்து இடுக்குப் பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கிருந்து மலையை பார்த்தால் ஐந்து முகங்கள் தெரியும். இது சிவனின் ஐந்து திருமுகங்களை குறிக்கக்கூடியது. இதனை பஞ்ச முக தரிசனம் என்பர். அடுத்து மலை வல பாதையில் இருந்து சுடுகாட்டுக்கு பிரியும் தனிப் பாதையில் சென்றால் வட கிழக்கு அதிபரான ஈசானன் வழிபட்ட ஈசான லிங்கம் உள்ளது.
இதனையும் வழிபட்டு, வழியில் உள்ள ஈசான்ய மடத்தில் ஜீவ சமாதியாக உள்ள ஈசான்ய ஞான தேசிகரையும் வணங்க வேண்டும். அதனை அடுத்து எதிரே ஒரு சிறிய விருஷபாரூடர் சன்னதி இருக்கும். அதை அவசியம் வணங்க வேண்டும். ஏன் என்றால் அந்த இடத்தில்தான் உமையம்மைக்கு சிவன் காட்சி அளித்து இடப்பாகம் தந்தருளினான்.
ஆதலால் அதையும் தரிசித்தல் மிக மிக முக்கியமானது. அதன் பிறகு மீண்டும் பூதநாராயணர் ஆலயம் அடைந்து அவருக்கு நன்றி கூறி, தீபம் ஏற்றி வழிபட்டு, வழித்துணையாக விக்னங்கள் இல்லாமல் காத்த இரட்டைப் பிள்ளையாரையும் வணங்கி வழிபட்டு, பின் அருணாசலேஸ்வரர் ஆலயம் சென்று தரிசித்த பிறகுதான் மலைவலம் முழுமையாகப் பூரணத்துவம் அடைகிறது.

கிரிவலம் செல்லும் முறை :-

நடந்துதான் செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லுதல் கூடாது. இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். இடப்புறமாகவே நடந்து செல்ல வேண்டும். மலை சுற்றும் போது கைகளை வீசிக்கொண்டும், பேசிக்கொண்டும் நடக்கக் கூடாது. நமச்சிவாய நாமத்தை உச்சரித்துக்கொண்டே நடந்து செல்லல் வேண்டும். அங்கும் ஆடிக் கொண்டும், பாடி, ஓடிக் கொண்டும் செல்லக் கூடாது. அமைதியாலவே செல்ல வேண்டும்.

மலை வலம் வர உகந்த நாட்கள் :-

எல்லா மாதங்களும் கிரி வலத்திற்கு ஏற்ற மாதங்களே ! . இருந்த போதும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பௌர்ணமி காலங்கள் மலை வலத்திற்கு ஏற்ற காலங்களும், மாதங்களும் ஆகும். ஏகாதசி, நீத்தார் நினைவு நாள்களிலும் கிரிவலம் வரலாம். அமாவாசை, பிறந்த நாள், திருமண நாள், பிரதோஷம், சிவராத்திரி போன்ற புண்ணிய தினங்களிலும் மலை வலம் வரலாம்.

கிரிவல மகிமை :-

புராண காலத்தில் பார்வதி தேவியார் சிவனின் இடப்பாகம் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் தன் பரிவாரங்களூடன் மலையை வலம் வந்தார். அப்போது சிவன் காட்சி தந்து உமையாளுக்கு இடப்பாகம் அளித்தார் என்பது வரலாறு. சித்தர்கள், ஞானிகள் ஆகியோர் ஒவ்வொரு மாதப்பிறப்பு மற்றும் பிரதோஷ காலத்தில் மலை வலம் வந்தனர். இன்றும் சூட்சும ரீதியாக வந்து கொண்டிருக்கின்றனர்.
சந்திரன் நம் மனத்துக்கு (எண்ணத்திற்கும்) காரகன்.
பௌர்ணமியன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகளவில் கிரகித்து பூர்ண நிலவாக, அதிகக் கலைகள் கொண்டவனாக சந்திரன் விளங்குகிறான். இதனால் பௌர்ணமி மலை வலம் வருவது சாலச்சிறந்தது என பெரியோர்களால் போற்றப்பட்டது.
சிவன் கோயில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமையாக இருக்கும். சோமவாரம், சோமப் பிரதிஷணம் போன்றவற்றின் மூலம் நாம் இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம்.
ஆனால், திரு அண்ணாமலை அக்னி மலை. அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. அக்னிக்குரிய கிரகம் அங்காரன். ஆகவே இந்தக் கோயிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்கிழமை அன்று தான் விசேஷ வழிபாடு நடக்கின்றது. செவ்வாய் கிழமை அன்று வழிபடுவோர் பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகின்றன. சத்குரு சேஷாத்ரி சுவாமிகளும் செவ்வாயன்று மலை வலம் வருதலை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார்.

பலன்கள் :-

ஊழ்வினைகளை நீக்கக்கூடியது அண்ணாமலையார் கோயில். பிறவிப்பிணி நீங்க வேண்டும் என விரும்பும் எவரும் மலை வலம் வருவதால் தத்தம் கர்மாவை குறைத்து கொள்ள முடியும்.
‘அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே!’ -என்கிறது தேவாரமும்.
மலை சுற்றி வரவேண்டும் என நினைத்து ஓரடி எடுத்து வைப்பவர்களுக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடி எடுத்து வைத்தால் ராஜ சூர்ய யாகம் செய்த பலன் கிடைக்கும் மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். நான்காவது அடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களும் பலன் கிடைக்கும். மலையைப் பற்றியும், மலை சுற்றுவதைப் பற்றியும் நினைப்பவர்களுக்கே இந்தப் பலன் என்றால், மலை சுற்றுபவர்களுக்கு கிடைக்கும் பலன்…??? அவர்கள், கைலாசத்திற்குள் நுழைந்து பிறப்பு இறப்பாகிய பிணி நீங்கி, மோட்சமாகிய உயர் பதவியை அடைவார்கள் என்று அருணாசல புராணம் தெரிவிக்கின்றது.
* ஞாயிற்றுக் கிழமை சுற்றினால் சிவபதவி கிடைக்கும்.
*திங்கட்கிழமை சுற்றினால் இந்திர பதவி கிடைக்கும்.
*செவ்வாய்க்கிழமை சுற்றினால் கடன்,வறுமை நீங்கும்.
*புதன்கிழமை சுற்றினால் கலைகளில் தேர்ச்சி, முக்தி கிடைக்கும்.
*வியாழக்கிழமை சுற்றினால் ஞானிகளாவார்கள்.
*வெள்ளிக்கிழமை சுற்றினால் விஷ்ணு பதம் அடையலாம்.
*சனிக்கிழமை சுற்றினால் நவக்கிரக தோஷம் நீங்கும்.
நாற்பத்தெட்டு நாட்கள் அதிகாலையில் கணவனும், மனைவியும் நீராடி மலைவலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும். கர்ம வினைகள் அனைத்தும் தொலையும். அமாவாசை அன்று சுற்றினால் மனதில் உள்ள கவலைகள் போகும். மனம் நிம்மதி அடையும். பாவங்கள் அனைத்தும் நீங்கும். பித்ரு தோஷங்கள் நிவர்த்தியாகும்.
ஆகவே, மலை வலம் வருவோம். மன நலம் பெறுவோம்.
அருணாசல அருணாசல அருணாசல…

கால பைரவாஷ்டமி

சிவாலங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதியாக வழிபாடு செய்யக்கூடிய தெய்வம் பைரவர். ஆலயத்தின் காவல் தெய்வமாக இருக்கும் பைரவர் சிவனுடைய அம்சமாக கருதப்படுகிறார்.ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்ததாகும். அந்த நாள் தான் பைரவாஷ்டமி என்று சொல்லப்படுகிறது. அதிலும், தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று கருதப்படுகிறது.

ஒரு காலத்தில், கோவில்களில் சன்னிதி பூட்டியதும், பைரவர் சன்னிதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவர். அதைத் தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவராக பைரவர் கருதப்பட்டார். இவரை வழிபடுவதற்கு உகந்த திதி தேய்பிறை அஷ்டமி. அதில், கார்த்திகை அஷ்டமி மிகவும் உயர்ந்தது.அபிதான சிந்தாமணி என்ற நூலில், பைரவர் வரலாறு கூறப்பட்டுள்ளது.
தாருகாசுரன் என்பவன், இறவா வரம் வேண்டும் என, சிவனிடம் கேட்டான். உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் கூறினார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர, தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை, ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம்.

பல அட்டூழியங்கள் செய்த அவனுக்கு அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவ, பார்வதியிடம் முறையிட்டனர். பார்வதி தேவி, சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தில் இருந்து, கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர், ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. “காளம்’ (விஷம்) படிந்த அந்த பெண்ணுக்கு, “காளி’ என பெயர் சூட்டினாள்.

காளிதேவி கடும் கோபத்துடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம், கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின், அந்த கனலை ஒரு குழந்தையாக மாற்றிய காளி, அதற்கு பாலூட்டினாள். அதன்பின், சிவபெருமான், காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார். அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன், அந்த குழந்தைக்கு, “பைரவர்’ என்று பெயர் வைத்தார். காளி, சிவன் ஐக்கியத்துடன், எட்டு மடங்கு சக்தியுடன், காளத்தை தன் உடலில் அடக்கிய அந்தக் குழந்தை, “காளபைரவர்’ எனப்பட்டு தற்போது, “காலபைரவர்’ ஆகியுள்ளது. இவரை தம் காவலுக்கு சிவபார்வதி நியமித்தனர்.

தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல வளர்ப்பர். சிலர், கண்டாலே கல்லெறிவர். இதுபோல், வாழ்க்கையில் இன்ப துன்பம் எது வந்தாலும், அதை இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என, வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாக, நாய் வாகனம் கருதப்படுகிறது. நாய்க்கு, “வேதஞாளி’ என்ற பெயர் இருக்கிறது.
பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்துள்ளனர்.

சித்திரை: ஸ்நாதனாஷ்டமி,
வைகாசி: சதாசிவாஷ்டமி,
ஆனி: பகவதாஷ்டமி,
ஆடி: நீலகண்டாஷ்டமி,
ஆவணி: ஸ்தாணு அஷ்டமி,
புரட்டாசி: சம்புகாஷ்டமி,
ஐப்பசி: ஈசான சிவாஷ்டமி.
கார்த்திகை: கால பைரவாஷ்டமி,
மார்கழி: சங்கராஷ்டமி,
தை: தேவதாஷ்டமி,
மாசி: மகேஸ்வராஷ்டமி,
பங்குனி: திரியம்பகாஷ்டமி.
இப்படி ஒவ்வொரு அஷ்டமி வழிபாடுகளுக்கும் தனிச் சிறப்புக்கள் உள்ளன.

இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். தற்போதைய கால கட்டத்தில் நமக்கு செல்வவளங்களை வழங்குவதற்கும் நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழவைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.

ஆகவே தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்குவது மிகச் சாலச் சிறந்தது. ஏனெனில் காலபைரவரை அன்று அஷ்டலட்சுமிகளும் வணங்குவதால் வணங்குபவருக்கு அனைத்து நலன்களும் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
நாம் ஏன் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்க வேண்டும் என்றால்ப அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லாநாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை.

நாமும் அதே தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட,அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும். நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு ஆகும்.

ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி நாளன்று நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளும் பூமியில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு வந்து அவரை வழிபடுகின்றனர். அப்படி வழிபடக் காரணம் என்னப பூமியில் வாழும் 700 கோடி மனிதர்களுக்கும் அஷ்ட லட்சுமிகள் செல்வச் செழிப்பை தினமும் அள்ளித் தருவதால்,அவர்களில் “செல்வ வள சக்தி” குறைகிறது;
அந்த செல்வ வள சக்தியை அதிகமாகப் பெறுவதற்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வருகின்றனர்.அதே தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்

அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்; அப்போ, செல்வத்துக்கு அதிபதி மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் கிடையாதாப யார் சொன்னது.

இவர்களே செல்வத்துக்கு அதிபதி.மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்தவரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்.இந்த தெய்வீக ரகசியம் பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்தது;கடந்த 50 ஆண்டுகளாக இந்த ரகசியம் மனித குல நன்மைக்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ராகு கால நேரத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரது மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும்.அவ்வாறு ஜபித்தால்,பின்வரும் நன்மைகளில் ஏதாவது ஒன்று நமக்குக் கிட்டும் என்பது அனுபவ உண்மை ஆகும்.

1. வர வேண்டிய பணம் வந்துவிடும்.
2. தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும்;எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
3. வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும், வலியும், வேதனையும் பெருமளவு குறையும்.
4. சனியின் தாக்கம்(ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரும்.
5. வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும்; தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும்.
6. அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகும்.
7. பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.
8. நமது கடுமையான கர்மவினைகள் தீரத்துவங்கும்.